திருவண்ணாமலை: திருவண்ணாமலை தென்றல் நகர் பகுதியிலுள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்(60), ராஜேஸ்வரி(55) தம்பதியினர்.
இவர்களுக்கு பாலமுருகன்(29) என்ற மகன் உள்ளார். இவர், சென்னையில் தங்கி தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், சிவானந்தம் சேத்துப்பட்டு நம்பேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தனது மனைவி, மருமகள், பேரனுடன் சென்றுள்ளார். அங்கு அவர் சில நாள்கள் தங்கியிருந்த நிலையில், சோமசிபாடி பகுதியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு அங்கிருந்தவாறே சென்றுள்ளனர்.
இதனிடையே வீட்டிற்கு வந்து தேவையான பொருள்களை எடுத்துச் செல்லலாம் என பாலமுருகனின் மனைவியும், அவருடைய மச்சானும் வந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டினுள் சென்றபோது, சுமார் 65 சவரன் தங்கநகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த காவலர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயி வீட்டில் 15 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு!