குடிபோதையில் காவலர் மீது தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ராணுவ வீரர்கள் கைது

author img

By

Published : May 16, 2023, 9:34 AM IST

குடிபோதையில் காவலர் மீது தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ராணுவ வீரர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது, குடிபோதையில் தாக்குதல் நடத்திய 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே நேற்று (மே 15) இரவு சாராயம் தொடர்பாக காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்ணமங்கலம் படவேடு சாலையில் உள்ள குப்பம் என்ற கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்துள்ளனர்.

இதனால், காவலர் அன்பழகன், ரகளையில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தாமல் வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதன் காரணமாக காவலருக்கும், எதிர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் 4 பேர் சேர்ந்து, காவலர் அன்பழகனை சராமரியாக தாக்கி உள்ளனர்.

பின்னர், இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற துணை காவல் ஆய்வாளர் கார்த்தி, ரகளையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதிலும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களான ஐயப்பன், பழனி, முருகன் மற்றும் அவர்களது உறவினர் சரணவன் என்பதும், இவர்கள் தங்களது கிராமத்தில் நடைபெற்ற குலதெய்வ வழிபாட்டிற்கு வந்த நிலையில், குடிபோதையில் காவலரைத் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கொலை மிரட்டல், ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 4 பேரையும் போளூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாலையில் பழ வியாபாரி, பூந்தோட்டத்தில் பெண்மணி சடலம்.. தென்காசியில் ஒரே நாளில் இரு படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.