திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தண்டலம் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக வழங்கப்பட்டு வரும் நீர் துவர்ப்புத் தன்மையுடன் உள்ளதால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இதனால், அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வரை பலருக்கும் புகார் அளித்துனர். சம்பந்தபட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மையான குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட நிர்வாகம் உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தண்டலை கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.