திருவள்ளூர்: உணவுப் பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 'சற்றே குறைப்போம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு பல்வேறு சீரிய திட்டங்களைத் தீட்டி வருகிறது.
அதில் ஒன்று மக்களின் உடலைப் பேணி காக்கும் திட்டமாகும். ஒவ்வொரு மனிதனிடத்திலும் சென்று, அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து சொல்வதென்பது அரசால் முடியாத காரியமாகும்.
உப்பினால் ஏற்படும் ரத்த அழுத்தம்
பொதுவாக உப்பு அதிக அளவில் பயன்படுத்தினால் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சர்க்கரை அதிகளவில் பயன்படுத்தினால் நீரிழிவு நோய் தாக்கும். அதேபோன்று ஒரு முறை சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் அஜீரணக் கோளாறு, உடல் உபாதை, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.
ஆகையால் 'சற்றே குறைப்போம்' என்ற திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பெரிய உணவகங்களிலிருந்து ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை கிலோ 30 ரூபாய்க்கு வாங்கி, அதன்மூலம் பயோடீசல் தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இது தவிர வீணாகும் உணவை சமூக ஆர்வலர்கள் மூலம் பெற்று உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் முன் காப்போம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து வகையான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'