கன்வேயர் பெல்ட் அமைக்கும் விவகாரம் - எண்ணூர் மீனவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

author img

By

Published : Jul 25, 2021, 12:53 PM IST

மீனவர்களுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

கொசஸ்தலை ஆற்றில் கன்வேயர் பெல்ட் அமைக்கும் விவகாரம் குறித்து, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், எண்ணூர் மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருவள்ளூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) காமராஜர் துறை முகத்தில் இருந்து, அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருந்தது.

ஆனால், அனுமதி பெற்ற வழித்தடத்துக்கு மாறாக, நீர் நிலைகளின் வழியை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் அப்பணிக்காக ஆற்றில் மணலைக் கொட்டி நீர் வழிப்பாதையை மறிப்பதாகவும், அனல்மின் நிலைய சாம்பலைத் தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கொட்டி கொசஸ்தலை ஆற்றுக்கும் கடலுக்குமான இணைப்பைத் துண்டிப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனைத்தடுக்கும் பொருட்டு மீனவர்கள், அரசிடமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடந்த ஜூலை 19ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த் துறை அலுவலர்கள், டான்ஜெட்கோ மேற்கொண்டு வரும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், இது குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றும் மீனவர்களிடம் உறுதி அளித்தனர்.

அந்தவகையில் நேற்று (ஜூலை 24) பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் மீனவ பிரதிநிநிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது இரு தரப்பையும் விசாரித்த கோட்டாட்சியர், மீன்வளம் காப்பாற்றவும், மீனவர்களுக்கு மாற்று வேலை வழங்கவும் தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: மதுரை வந்த ராணுவ வீரரின் உடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.