மகனுக்குப் பதிலாக தந்தை வெட்டிக் கொலை - 6 பேர் கைது

author img

By

Published : Sep 10, 2021, 2:10 PM IST

தந்தை வெட்டிக் கொலை

கும்மிடிப்பூண்டி அருகே மகனுக்குப் பதிலாக தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆறு பேரை ஆரம்பாக்கம் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழில் (21). இவருக்கும் தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவருக்கும் நீண்ட நாள்களாகத் தகராறு இருந்துள்ளது.

இதனிடையே நேற்று (செப். 9) எழிலின் உறவினர் வீட்டு, திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு மணிகண்டன் அவரது நண்பர்கள் ஐந்து பேருடன் சென்று, வம்பிழுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்ட எழில் தனது உறவினரான ஜீவாவின் (29) உதவியுடன் மேற்கண்ட ஆறு பேரையும் வழிமறித்துத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜீவாவின் மீது ஆறு பேரும் ஆத்திரமடைந்தனர்.

இந்நிலையில் இன்று (செப். 10) அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த ஜீவாவின் தந்தை மோகனிடம் (62) மகன் குறித்து விசாரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் மோகனை சரமாரியாகத் தாக்கிவிட்டு ஆறு பேரும் தப்பிச் சென்றனர்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மோகனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மோகன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), ஜீவாநந்தம் (28), அண்ணாமலை (27) கோபி (30), பிரேம்நாத் (29), விஜயராஜ் (28) ஆகிய ஆறு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.