அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அர்ஜூன் சம்பத்

author img

By

Published : Aug 6, 2022, 3:32 PM IST

அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அர்ஜூன் சம்பத்

அம்பானி, அதானி போன்றவர்கள் தேசபக்தி உடையவர்கள். அவர்கள் இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள். உலக பணக்காரர்கள் வரிசையில் சன் டிவி குடும்பம், கருணாநிதி குடும்பம் தான் பெரிய அளவில் வருகிறார்கள் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

திருவள்ளூர்: இந்து மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஒன்றியம் அல்ல இந்தியா, திராவிடம் அல்ல தேசியம் என்ற பிரச்சார வாகனம் சுதந்திர போராட்ட நினைவு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் திருவள்ளூரில் உள்ள மக்களுக்கு தேசிய கொடியை வழங்கியும், சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தியடிகள், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார்.

பின்னர் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோவிலுக்கு சென்று அங்கு சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர்களின் சிலம்பாட்டம் தீப்பந்தம் ஆட்டம் ஆகியவற்றை கண்டு ரசித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,”இந்து மக்கள் கட்சி சார்பில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி காந்தியடிகள் கஸ்தூரிபாய் அம்பேத்கர் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்தும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளை சந்தித்து அவர்களுக்கு பாத பூஜை செய்தோம்.

அம்பானி, அதானி இந்திய மக்களுக்காக பாடுபடுகிறார்கள் - அர்ஜூன் சம்பத்

மேலும் மாவட்ட நிர்வாகம் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு புகழ் பெற்றவர்கள் ஆ.ராசா, கனிமொழி. இந்த 5ஜி ஏலத்தில் முறைகேடு நடந்தால் அதை ஆ.ராசா பாராளுமன்றத்தில் பேச வேண்டும் அல்லது வழக்கு தொடர வேண்டும். அங்கு பேசாமல் மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் சன் டிவி குடும்பமும், கருணாநிதி குடும்பமும் தான் முன்னேறி வருகின்றனர். அம்பானி, அதானி போன்றவர்கள் தேச பக்தி உடையவர்கள். அவர்கள் வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களை நம் நாட்டுக்குள் விடாமல் அவர்களே இங்கு தொழில் செய்கின்றனர். அவர்கள் இந்தியர்களுக்காக பாடுபடுகின்றனர். அவர்களிடம் சேரும் பணம் இந்தியர்களிடம் சேரும் பணமாகும். ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் அவதூறு பிரச்சாரம்.” என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பாரதமாதா செந்தில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘5ஜி’ அலைக்கற்றை ஏலத்தில் மோசடி - ஆ. ராசா பரபரப்பு குற்றச்சாட்டு... முழுவிவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.