திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடங்களாக ஆதரவற்றோர் நல காப்பகம் திருநெல்வேலி குறுக்கு துறையில் இயங்கி வருகிறது.
மாநகர பகுதிகளில் ஆதரவற்று சுற்றித் திரிபவர்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் வயது முதிர்வு காரணமாக தெருவோரங்களில் பிச்சை எடுப்பவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு, ஆடைகள் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.
பல மாதங்களாக காப்பகத்தில் முடங்கியிருந்த அவர்களை கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி சிற்ப கோவிலுக்கு தன்னார்வலர்கள் அழைத்துச் சென்றனர்.
அவர்களுக்கு கோவில் உள்ள சிற்பங்களை கல்லூரி மாணவிகள், சமூக ஆர்வலர்கள் காண்பித்து அதன் கலை நயத்தை விளக்கினர். அவர்களுக்காக வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
இதுபற்றி முதியவர்கள் கூறும்போது, பல மாதங்கள் காப்பகத்திற்கு உள்ளே இருந்து இன்று வெளி உலகத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மனதுக்கு இதமாக உள்ளது என தெரிவித்தனர்.