வெளிநாட்டில் வேலை என பலரிடம் மோசடி; தாய் மீது மகன் ஆட்சியரிடம் புகார்!

author img

By

Published : Jan 23, 2023, 9:28 PM IST

Etv Bharat

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியதாக, மகனே தனது தாயாரின் மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வேலை என மோசடி; தாய் மீது மகனே நெல்லை ஆட்சியரிடத்தில் பரபரப்பு புகார்

திருநெல்வேலி: வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது நான்கு குழந்தைகளுடன் அதே பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பனகுடி காவல் நிலையத்தில் எழுத்தர் ஆக பணிபுரிந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்ணன் மனைவி காவல்துறையில் அளித்த புகாரி பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கண்ணன்-இசக்கியம்மாள் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இசக்கியம்மாள் வடக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் அரேபிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தெரிகிறது.

அந்த வகையில், ஒரு லட்சம் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் அவரிடம் முறையிட்டு வந்த நிலையில், இசக்கியம்மாள் அடிக்கடி வீட்டை காலி செய்து வெவ்வேறு பகுதிகளில் குடியிருந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் இசக்கியம்மாளின் மகன் ஸ்டாலின் என்பவர் தனது தாயின் மோசடி நடவடிக்கையை பிடிக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு அப்பாவி பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம் என இசக்கியம்மாளிடம் அவரது மகன் ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தியுள்ளார். அதற்கு 'உனக்கு ஒன்றும் தெரியாது நீ சும்மா இரு' என்று அவரது தாயார் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனது தாயின் மோசடி செயலைக் கண்டு மனம் வெதும்பிய ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இருப்பினும் சொந்த மகன் என்று கூட பார்க்காமல் ஸ்டாலினை அடியாட்களை வைத்து இசக்கி அம்மாள் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இசக்கியம்மாளின் மகன் ஸ்டாலின் இன்று (ஜன.23) பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையில் ஸ்டாலின் இன்று தனது தாயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவில் பொதுமக்களை ஏமாற்றும் தனது தாய் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்மூலம், வெற்றி கொடி கட்டு திரைப்பட பணியில் பல மதங்களாக ஒவ்வொரு பகுதியாக சென்று வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இசக்கியம்மாள் மோசடி செய்து வருவதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்கள் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை நாம் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று கருதும் 2k கிட்ஸ்களுக்கு மத்தியில் பொதுமக்களை ஏமாற்றும் தனது தாயின் செயலைப் பிடிக்காமல், துணிச்சலுடன் வீட்டை விட்டு ஸ்டாலின் வெளியேறியுள்ளார். அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெற்ற மகனே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 2வது கல்யாணம் ஆன மூன்றாவது நாளே பெண் தற்கொலை.. கணவன் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வன்கொடுமை வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.