’விலகல் காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கலாம்...’ - எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

author img

By

Published : Sep 25, 2021, 8:58 AM IST

நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து விலகிய காரணம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கலாம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்பது மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

எடப்பாடியாருக்கு காரணம் தெரியும்?

அதன்படி இன்று (செப்.24) திருநெல்வேலியின் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

இவர் முன்னர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து, பின்னர் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்.

அவர் பேசுகையில், “அதிமுக ஒரு வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். பிறகு ஏன் கட்சியை விட்டு சென்றேன் என கேட்கிறீர்களா? அது எனக்கு தெரியாது, ஒருவேளை அதற்கான காரணம் அண்ணன் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்கலாம்.

ஆளுங்கட்சி அதிமுக?

எது எப்படியோ அதிமுக வாழவேண்டும், வளர வேண்டும் என, எனது முழு அக்கறையும் என்றைக்கும் உண்டு. அதிமுக என்பது ஒரு காட்டாற்று வெள்ளம். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில், சில இடங்களில் நீர் நிரம்பி வெளியே ஓடும். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்தான். ஆகையால் நீங்கள் தைரியமாக இருக்கலாம், இரட்டை இலை ஒருபோதும் தோற்காது. வெற்றி மேல் வெற்றி தேடி வரும்.

பாஜக, அதிமுக இடையேயான கூட்டணி இன்று மட்டுமல்லாமல், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடரும். அதிமுக மீண்டும் ஆளுங்கட்சியாக வரும் சூழல் மிக விரைவில் வரும்” என்றார்.

இதையும் படிங்க: ‘சாதிகளை வளர்ப்பதன் மூலம் இந்து உணர்வை எழுப்பலாம் என பாஜக நினைக்கிறது’ - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.