திருநெல்வேலி: திருநெல்வேலியின் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பகல் நேரத்தில் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்பட்டது.
இதில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த முருகனின் வீட்டுக் கூரை இடிந்து விழுந்தது. விபத்தில் அவரது மகன் ஆகாஸ்(3) எனும் குழந்தை உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள், கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரியை மூட உத்தரவிட்ட துணை ஆட்சியர்
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (செப்.24) சீலாத்திகுளம் கல்குவாரியை துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கல்குவாரியில் விதிமீறல்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆராயப்பட்டது. பின்னர் விசாரணை முடியும்வரை கல்குவாரியை மூடவும், உரிமையாளரை வரும் 30ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
தொடர்ந்து கூடங்குளம் அருகில் உள்ள சுச்சிகுளம் கிராம கல்குவாரியிலும் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதன் காரணமாக நடத்தப்படவிருந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கைக்குழந்தையை கொலை செய்த தந்தை தற்கொலை!