ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க அவசியமில்லை: அண்ணாமலை

author img

By

Published : Jan 25, 2023, 10:32 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க அவசியமில்லை - அண்ணாமலை திட்டவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபித்துக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி: மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா, பாஜக சட்டமன்ற குழு தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சட்டமன்றத்தில் பாஜக சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய நிலையில், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு நாள் சேது சமுத்திர திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்த பின்னர், அது சாத்தியம் இல்லை என்பதால், அந்த திட்டம் பற்றி பேசுவதை திமுகவினர் நிறுத்தி விட்டனர். திமுகவின் திட்டங்கள் அனைத்தும் திடமானதாக இல்லை. ஈரோடு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னே அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமாவாசை அன்று நல்ல நாள் என பார்த்து, திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இது மற்ற தேர்தலைக் காட்டிலும், விசித்திரமான தேர்தலாக உள்ளது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் அறிவித்ததில் அதிருப்தியில் உள்ளார். இதனை மறைப்பதற்கு திமுக கபட நாடகம் போடுகிறது. சுதந்திரத்திற்கு பின் நடந்த இடைத்தேர்தலில், 80 சதவீதம் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றுள்ளது.

பணமழை அதிகம் கொட்டி, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது வாடிக்கையாகி விட்டது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு நாட்கள் உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியில், அதிமுக பலமான கட்சியாக உள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்க வேண்டாம். கூட்டணியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். இடைத்தேர்தலில் பணபலம், படைபலம், அதிகார துஷ்பிரயோகம்தான் வெற்றி பெறும். இந்த தேர்தல் பாஜகவுக்க்கான தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே.

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்குவதில் எங்களது பணி சிறப்பாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதிமுக பிரதான கட்சியாக உள்ளது. பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

தேர்தல் ஆணையம், பறக்கும் படை போன்றவைகளை அமைத்தாலும், அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணம் வெளியே வரத்தான் போகிறது. அதை நீங்களும் பார்ப்பீர்கள். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழா தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணித்தது என்பது, டீ செலவு மிச்சம் என்பதே. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நினைப்பதாக தெரிவித்த ஓபிஎஸ் கருத்துக்கு, சொல்ல வேண்டிய நேரத்தில் பதில் சொல்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா?; கே.எஸ்.அழகிரி சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.