பணியிடமாற்றத்திற்கு அமைச்சருக்கு லஞ்சம்: திமுக தேனி நகரச் செயலாளர் பேரம் பேசும் வீடியோ

author img

By

Published : Jan 16, 2022, 8:48 PM IST

Updated : Jan 16, 2022, 9:43 PM IST

ஆசிரியைப் பணியிடமாற்றத்திற்கு அமைச்சருக்கு லஞ்சம் : திமுக தேனி நகரச் செயலாளர் பேரம் பேசும் வீடியோ வைரல்

ஆசிரியர் பணியிடமாற்றத்திற்கு அமைச்சருக்கு திமுக தேனி நகரச் செயலாளர் சூர்ய பாலமுருகன் லஞ்சம் கேட்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தேனி: வடபுதுபட்டியைச் சேர்ந்தவர் திமுக தேனி நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன்.‌ இவர் அரசுப் பணியிட மாறுதல் பெற வேண்டும் என்றால், அமைச்சர் அலுவலகத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும்,

அதற்கு முன்பணமாக 3 லட்ச ரூபாயும், இரண்டு லட்சத்தை காசோலையாக வழங்க வேண்டும் எனவும், பணியிட மாறுதலுக்கான ஆணை கிடைத்ததும், காசோலையை வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக்கொள்வதாகவும் ஒருவரிடம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

திமுக தேனி நகரச் செயலாளர் பேரம் பேசும் வீடியோ

லஞ்ச பேரம் பேசும் வைரல் வீடியோ:

மேலும் அந்த வீடியோவில், ”அரசுப் பணியிட மாறுதல் பெறுவதற்கு இதைவிட வேறு எவரும் குறைவாகப் பணம் வாங்குவதில்லை. இது போன்று பத்து நபர்களின் பணியிட மாறுதலுக்காக அமைச்சா் அலுவலகத்திற்கு 30 லட்சம் ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். நம்பிக்கையுடன் வந்தால் மட்டுமே இந்த வேலைகளை செய்து தர முடியும்” எனப் பேரம் பேசுகிறார்.

இதனிடையே தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்த ஜெயகாளை என்பவர் மீது, திமுக தேனி நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ”ஜெயகாளை என்பவர், ஒரு வீடியோ எடுத்து அதில் நான் பேசும் குரல்களை டப்பிங், எடிட்டிங் செய்து என்னை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார் . இந்தப் பொய்யான வீடியோவை சோசியல் மீடியாக்களில் போட்டுள்ளார்.

அதேபோல் ஒரு பெண் குரல் போல் பேசி, வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, நான் அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒரு ஆடியோ ரெக்கார்டிங் தயார் செய்துள்ளார். அந்த ஆடியோவை என் வாட்ஸ்-அப் நம்பருக்கு போட்டு, என்னிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்.

அதேபோல் நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தேனி நகர் மன்றத் தலைவருக்கு போட்டியிடுகிறீர்கள்.

இந்த வீடியோ, ஆடியோக்களை போட்டு உங்கள் பெயரை அசிங்கப்படுத்திவேன் என்று என்னை பயமுறுத்துகிறார் . எனவே, என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும், இவரைப் போன்ற நபர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா பாலமுருகன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வடபுதுபட்டி ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார்.

தேனி நகராட்சித் தலைவராக வேண்டும் என்ற இலக்குடன் சூர்யா பாலமுருகன் இயங்கி வந்தார். தேனி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் வடபுதுபட்டியும் ஒன்று. அப்போதே மு.க.ஸ்டாலினிடம் மனதில் இடம் பெற வேண்டும் எனப் பெரும் செலவு செய்து தனது அரசியல் பலத்தைக் காட்டியவர்.

இந்நிலையில், இவர் பணியிடமாறுதல் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள வீடியோ தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகி மீது பல்வேறு குற்றச்சாட்டு:

இதுகுறித்து ஜெயகாளையிடம் பேசியபோது அவர், ”நான் தேனி மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகச் செயலாளராக உள்ளேன். மூவேந்தர் புயல் மீடியா நடத்தி வருகிறேன். சூர்யா பாலமுருகன் பேசிய வீடியோ பதிவு உண்மையானது. பாதிக்கப்பட்ட நபர் வீடியோ பதிவு செய்து என்னிடம் ஒப்படைத்தார்.

நான் என்னுடைய யூ-ட்யூப் சேனலில் அதை வெளியிட்டேன். வேறு மீடியாக்களிடமும் அவர் கொடுத்துள்ளார்.

அந்த ஆசிரியை அரசு நடத்திய கலந்தாய்வில் கலந்துகொண்டு யாருக்கும் பணம் கொடுக்காமல் பணிமாறுதல் பெற்று வந்துவிட்டார். ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு திருவண்ணாமலையில் இருந்து தேனிக்கு கேட்டனர்.

இடமாறுதலுக்காக சூர்யா பாலமுருகனிடம் பேசியவர், அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் நபர் ஆவார்.

பாலமுருகன் இடமாறுதல் மட்டுமில்லாது அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் பணம் பெற்றுள்ளார். இதையும் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்.பி.யிடும் புகார் அளிக்க உள்ளேன். இதனிடையே சூர்யா பாலமுருகன் தரப்பினர் என்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன்.

சூர்யா பாலமுருகன் தேனி நகரப் பொறுப்பாளராக இருக்கும் போதே, வெளிப்படையாக ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு இவ்வாறு பணம் கேட்டு வருகிறார்.

இதில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தான் விசாரிக்க வேண்டும். எனவே அவருக்கும் அனைத்து ஆதாரங்களுடன் மனு அனுப்பியுள்ளேன்”என்றார்.

பணியிடமாறுதல் தொடர்பான வீடியோ பதிவு செய்தவர் காவல் துறையிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு அனைத்து ஆதாரங்களையும் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பேன் என்றார்.

”நான் தலைவர் ஆவதைத் தடுக்க சதி..!”:

இதுகுறித்து சூர்யா பாலமுருகனிடம் பேசியபோது அவர்,”வடபுதுபட்டி ஊராட்சியில் அரசு நிலம் போலியாக பட்டா போடப்பட்டு கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டது.

அப்போது லாரிக்கான பாஸ் குறித்து கேள்வி எழுப்பிய என் மீது 3 வழக்குகள் போட்டனர். அதைத்தொடர்ந்து அரசு நிலம் மாயமானது குறித்த செய்திகள் வெளிவந்தன.

தற்போது மீண்டும் அந்த விவகாரம் வெளியே வந்து சிபிசிஐடி விசாரணை வரை வந்துள்ளது. அதற்கு நான் தான் காரணம் என சிலர் நினைக்கின்றனர்.

குறிப்பாக அதிமுக நகரச் செயலாளர்கள் அன்னப்பிரகாசம், கிருஷ்ணகுமார், முன்னாள் நகரச் செயலாளர் இலங்கேஸ்வரன், பிஜேபியில் உள்ள அவரது மகன் ரவிக்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தான் என்னைப் பற்றிய தவறான வீடியோக்கள் பரப்பப்படுகின்றன.

நான் தேனி நகராட்சித் தலைவர் ஆகிவிடக் கூடாது என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஜெயகாளை என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு பெண் சத்துணவு வேலை வாங்கித் தருவதாக எனக்கு இரண்டரை லட்சம் கொடுத்ததாகக் கூறிப் பேசினார். அந்தப் பெண் பேசியது போன்ற ஆடியோ ஒன்றையும் அனுப்பினார்.

அந்த ஆடியோ பொய்யானது. அந்தப் பெண்ணை அழைத்து வாருங்கள். பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்றேன்.

மாட்டிக் கொண்டதைப் புரிந்துகொண்ட ஜெயகாளை தொடர்ந்து எனது வாட்ஸ்-அப்க்கு மன்னிப்புக்கோரி, வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

பிறகு பணியிடமாறுதல் தொடர்பாக பணம் கேட்பது போன்ற வீடியோவை அவர் நடத்தும் யூ-ட்யூப்பில் வெளியிட்டுள்ளார். அதுவும் பொய்யானது என அவரே அழித்துவிட்டு, பிறகு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.

அவர் மீது எஸ்.பி.யிடம் புகார் அளித்ததும், அவரும் என் மீது புகார் அளித்துள்ளார். அவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக கூறுவதும் கூட பொய் தான். அவர் பேசி, எனக்கு அனுப்பிய மெசேஜ் அனைத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன். காவல் துறையினர் அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க:பாடி மேம்பாலத்தில் ஆட்டோ மோதியதில் பயணி உயிரிழப்பு - ஆட்டோ ஓட்டுநர் கைது

Last Updated :Jan 16, 2022, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.