கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கேரளா மாநிலம் முழுவதும் பலத்த கனமழை பெய்து வரும் சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் தங்க மேற்கூரையில் இருந்து மழைநீர் சன்னிதானத்திற்குள் ஒழுகி வந்தது. இதன் காரனமாக மேற்கூரை மற்றும் சன்னிதானத்தில் எதிரே உள்ள வாயிற்காவலர் சிலைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இதனை பராமரிக்கும் பணியினை மேற்கொள்ள தேவசம் போர்டு முடிவு செய்தது. இதனை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று புகழ்பெற்ற வாஸ்து நிபுணரும், முன்னாள் தேவசம் போர்டு தலைவருமான எம்கே ராஜூ, தந்தரி கண்டர் மகேஷ் மோகனர், தேவசம்போர்டு தலைவர் ஆனந்த கோபன் மற்றும் மாவட்ட நிதிபதி எம் மனோஜ், திருவாபரன ஆணையர் பைஜூ , சபரிமலை செயல் அலுவலர் உள்ளிட்டோர்கள் கொட்டும் மழையில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது தங்க மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் தங்க ஆணிகள் பழுது காரணமாக மழைநீர் மேற்கூரை வழியாக சன்னிதானத்தில் ஒழுகுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தங்க ஆணிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் தற்காலிக ஏற்பாடாக தங்க கூரைகளில் உள்ள இடைவெளிகளில் நீர் கசிவை தடுக்கும் வகையில், பசையினை கொண்டு பூசப்படும். இந்த பணிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கும். இவை அனைத்தும் ஓணம் பண்டிகையை ஒட்டி கோயில் நடை திறப்பதற்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்த பக்தர்கள்!