தேனியில் உள்ள வால்கரடு காப்புக்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வால்கரடு பகுதியில் செல்லும் புறவழிச்சாலை ஓரம் நேற்று (செப்.05) காலில் பலத்த காயத்துடன் மயில் ஒன்று நடக்க முடியாமல் ஒற்றைக் காலில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனக்காப்பாளர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் மயிலை மீட்டு தேனி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து 30 நிமிடங்களுக்குள் மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், ”காயமடைந்தது ஆறு வயதிற்குட்பட்ட ஆண் மயில். பிறவியிலேயே காலில் குறைபாடுடன் பிறந்துள்ள இந்த மயிலுக்கு, கால் பாதத்தில் காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் இருந்துள்ளது. தொடர்ந்து, சிகிச்சை அளிப்பதற்காக மயிலை கைகளால் பற்றியிருந்தபோது அதன் இருதயத் துடிப்பு அதிகரித்தது. எனவே மயிலுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து மீண்டும் அதே வனப்பகுதியில் விடப்பட்டது” எனத் தெரிவித்தார்.