தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி - சிவகாமி என்பவரது மகன் சுரேஷ். ராணுவ வீரரான இவருக்கு சித்ரா (41) என்பவருடன் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுரேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு பழகிவந்ததால், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, குடும்பப் பிரச்சினையால் தனித்தனியே பிரிந்து வாழத் தொடங்கினர்.
மாமனார், மாமியார், சுரேஷ், சகோதரர் ராஜாராம், அவரது மனைவி மஞ்சு ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துவந்ததன் காரணமாக சித்ரா உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுரேஷின் பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் பிள்ளைகளுடன் சித்ரா குடியிருக்கவும், அவர்களின் கல்விச் செலவுக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சித்ரா குடியிருந்த வீட்டை அவரது மாமனார் சுப்ரமணி வேறொருவருக்கு ஒத்திக்குவிட்டதாகவும், எனவே உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சித்ரா தனது உடலில் டீசலை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து தேனி நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் சித்ராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க: வழிப்பறி கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த சிசிடிவி!