தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மதுரை-போடி ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பப்பட்டது.
குறுகிய (மீட்டர் கேஜ்) ரயில் பாதையாக இருந்த இந்தப் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2008ஆம் ஆண்டு, 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இதற்கான பணிகள், 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 20-க்கும் அதிகமான பெரிய மேம்பாலங்கள், 100-க்கும் அதிகமான சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளன.
இதில் உசிலம்பட்டி வரை உள்ள பகுதியில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளைக் குடைந்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட முக்கியப் பணிகள் நிறைவடைந்த சூழலில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை, இரண்டாம் கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரயில் பாதை அமைக்கும் பணிகள், ரயில் நிறுத்தம், ரயில் நிலையங்களில் நடைமேடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் தற்போது போடி, தேனியில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் நிற்பதற்கான நடைமேடை அமைக்கும் பணிகளுக்கு இ-டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.