தேனி: சின்னமனூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகள் கார்த்திகா, இவர் தனது 8 வயது மகள் ஹாசினி ராணியுடன் தனது தந்தை ரங்கநாதன் வீட்டிற்குச் சென்றார். தனது தாத்தவின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி, வீட்டின் அருகே பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைத்திருந்த 5 அடி பள்ளக் குழியில் எதிர்பாராத விதமாக விழுந்தார்.
பள்ளத்தில் மழை நீர் அதிகளவில் கிடந்ததால் சிறுமி நீரில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரம் சிறுமியின் சத்தம் கேட்காததால் சிறுமியை காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் தாயார் தேடினர். பின் மகளின் செருப்பு பள்ளத்தில் உள்ள நீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பள்ளத்தில் இறங்கி பார்க்கும்போது சிறுமி மயக்க நிலையில் இருந்துள்ளார். உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெர்வித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓடைப்பட்டி காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி பேரூராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இதையும் படிங்க: ஆரோவில் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கான குறும்பட போட்டி