கோடநாடு வழக்கு: 10ஆவது குற்றவாளிகளிடம் 5 மணி நேரம் விசாரணை!

author img

By

Published : Sep 6, 2021, 7:56 PM IST

kodanad

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாயினின் உறவினர் சாஜி, கூடலூரைச் சேர்ந்த பார் உரிமையாளர் அனீஷ் ஆகியோரிடம் தனிப்படையினர் ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட், பங்களாவுக்குள் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலைசெய்தது.

பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

5 தனிப்படைகள் அமைப்பு

இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு, அனைவரும் பிணையில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல் துறையினர் சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கடந்த மாதம் மறுவிசாரணை மேற்கொண்டனர். மேலும், விசாரணையை விரைந்து முடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்தத் தனிப்படை வழக்கில் தொடர்புடையவர்களை விசாரித்துவரும் நிலையில், கனகராஜின் மனைவி, மைத்துனர், கோடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரையும் விசாரித்தது.

10ஆவது குற்றவாளி

இந்நிலையில் இன்று, இவ்வழக்கில் 10ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாயினின் சித்தப்பா சாஜி, கூடலூரைச் சார்ந்த பார் உரிமையாளர் அனீஷ் ஆகியோரிடம் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், தனிப்படை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள்

அப்போது, கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? கூடலூர் காவல் துறையிடம் சிக்கிய ஜித்தின் ஜாய், தீபு, மனோஜ்சாமி, ஜம்சீர் அலி உள்ளிட்ட எட்டு பேரை கூடலூர் காவல் நிலையத்திற்குச் சென்று சிபாரிசு செய்துவிடுத்தது ஏன் என்பன உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர், அனைத்து வாக்குமூலங்களையும் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர், அவர்களை ரகசியமாக காரில் கூடலூருக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: கோடநாடு திக் திக்: அக்டோபர் 1இல் விசாரணை; களத்தில் தனிப்படை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.