சாதித்தீண்டாமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஊருக்குள் நுழையத்தடை ஏன்? - அரசு வழக்கறிஞர் விளக்கம்

author img

By

Published : Sep 21, 2022, 8:35 PM IST

Etv Bharat

பாஞ்சான்குளத்தில் மேலும் வன்முறை நடைபெறாமல் தடுக்கவே குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமி தெரிவித்தார்.

நெல்லை: தென்காசி மாவட்டம், பாஞ்சான்குளம் சாதி தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகளால் மேலும் இது தொடர்பாக எவ்விதமான வன்முறைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நீதிமன்றம் குற்றவாளிகளை ஊருக்குள் நுழையத் தடை விதித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சான்குளத்தில் பள்ளி சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அங்கு கடை நடத்தி வரும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தின்பண்டம் வாங்க வந்த சிறுவர்களுக்கு ஊர் கட்டுப்பாட்டை காரணம் காட்டி, தின்பண்டம் கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக, கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திர மூர்த்தி, குமார் மகேஷ்வரன் ஆகிய குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேலும் முருகன், சுதா ஆகிய இருவரைத் தேடி வரும்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், இக்குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊருக்குள்ள நுழையத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பத்மநாபன் குற்றவாளிகள் 5 பேருக்கு 6 மாதம் ஊருக்குள் நுழையத்தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழையத்தடை விதிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தீண்டாமை செய்த குற்றவாளிகளுக்கு ஊருக்குள் நுழையத் தடை - அரசு வழக்கறிஞர் விளக்கம்

இதுகுறித்து இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் கந்தசாமி இன்று (செப்.21) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் இதுபோன்ற மேலும், பல சாதிப்பாகுபாடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனவே, அப்பகுதியில் மேலும் வன்முறை நடைபெறாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களின் உடைமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் நீதிமன்றம் மூலம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேரும் ஆறு மாதங்கள் பாஞ்சான்குளம் கிராமத்துக்குள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவின்படி, அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை குற்றவாளிகள் ஊருக்குள் நுழையாமல் தடை விதிக்க முடியும். இந்த வழக்கில் போலீசார் ஒரு ஆண்டு காலம் குற்றவாளிகள் ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தற்போது நீதிபதி ஆறு மாத காலம் தடை விதித்துள்ளார்' என்று தெரிவித்தார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இதுபோன்ற ஒரு பிரிவு இருப்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்துள்ள முயற்சி காரணமாக இந்த சட்டப்பிரிவு முதல் முறையாக செயல்பாட்டிற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசி சாதி தீண்டாமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஊருக்குள் நுழைய தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.