செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டல்; ஆசிரியர்களை கைது செய்யக்கோரி போராட்டம்!

author img

By

Published : Jul 19, 2022, 10:58 PM IST

செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டல்; ஆசிரியர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டலுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக்கோரியும், பணிநீக்கம் செய்ய வேண்டியும் போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை: மானாமதுரையில் சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பெண் மாணவிகளுக்கு பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகப் புகார் எழுந்து வந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி காது கேளாதோர் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடிய 50-க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் சங்கத்தினர் பாலியல் சீண்டல்களுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக்கோரியும் அவர்களை பணி நீக்கம் செய்யக்கோரியும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்து சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளி வரை பேரணியாக சென்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தினர் மற்றும் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மானாமதுரை டிஎஸ்பி கண்ணன், மானாமதுரை தாசில்தார் சாந்தி ஆகியோர் விசாரணை செய்தனர்.

விசாரணையின் முடிவில் இந்தப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியரான ஆல்பர்ட் ஆபிரகாம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாகவும் மற்றும் காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்தார்.

இதுகுறித்து டிஎஸ்பி கண்ணன் கூறும்பொழுது, 'மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தரப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார். மாற்றுத்திறனாளி நல அலுவலர் கூறும் போது, ’இந்தப் பள்ளியில் கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இங்கு பணிபுரிந்த ஆல்பர்ட் ஆபிரகாம் மீது புகார் உறுதி செய்யப்பட்டது.

செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டல்; ஆசிரியர்களை கைது செய்யக்கோரி போராட்டம்!

மேலும் இந்தப் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்த ஆசிரியர் மீது புகார் இருந்ததாக தெரிவித்தனர். மேலும் இதில் இரு ஆசிரியர்கள் என்ற குற்றச்சாட்டில் தற்போது ஒரு ஆசிரியர் மட்டும் விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க ஆலோசனை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.