சிவகங்கை: காரைக்குடி அடுத்துள்ள கண்டனூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (69). இவரது மனைவி விசாலாட்சி (65).
கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி இவர்களை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் 45 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருள்கள், ரூ.2½ லட்சம் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்நிலையில் மாத்தூர் விலக்கு அருகே காவல் துறையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த அசோக்குமார், மகேஷ் ஆகிய 2 பேரை காவல் துறையினர் விசாரிக்கையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் வைத்திருந்த தங்க நகை குறித்து 2 பேரையும் தனித்தனியாக விசாரித்தனர். இதில் அவர்கள் கண்டனூர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
தீவிர விசாரணைக்கு பின்னர், கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட பாக்கியலட்சுமி, திட்டம் வகுத்துக்கொடுத்த மஞ்சுளா, கொள்ளையில் ஈடுபட்ட அசோக்குமார், மகேஷ், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ராமு, தேவகோட்டை பிரபுராஜ், வேலங்குடியை சேர்ந்த அம்சகுமார், ஐங்கரன் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நவீன், பந்தள ராஜா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:Mobile shop theft video: செல்போன் கடையில் திருட்டு