சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள், கல்வெட்டு கண்டுபிடிப்பு!

author img

By

Published : Jun 23, 2022, 10:35 PM IST

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள்‌, கல் வட்ட எச்சங்கள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை: தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன் என்பவர் சித்தலூர் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசாவிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவ்விடத்தில் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் கல்வட்ட தொல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவுநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 'சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கிலிருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோயில்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் புதிதாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கோயிலை ஒட்டி குவியலாகக் கிடைக்கும் கற்குவியலில் கல்லெழுத்து பொறிப்புடன் ஒரு கல் காணப்பெறுகிறது.

துண்டுக் கல்வெட்டு: கல்லெழுத்துப் பொறித்த இக்கல்வெட்டை வேறொரு பகுதியில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். இக்கல்லை நிலைக்கல்லின் மேல் பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம். இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் எழுத்து காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

இதில் நாயனாருக்கு, கடமை, அந்தராயம் போன்ற வரி தொடர்பான சொற்களும் குறிச்சிகுளம் இசைந்த ஊரோம் போன்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் குறிச்சிகுளம் பகுதி இறைவனுக்குத் தானமாக வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. சித்தலூரை அடுத்த குறிச்சி கண்மாய் எனும் பெயரில் கண்மாய் ஒன்று உள்ளது.

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

இக்கரையில் சிதைந்த நிலையில் துண்டு கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். ஆனாலும் அதற்கு போதுமான தரவுகள் கிடைக்கப்பெறவில்லை. இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோயிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம். கோவானூரிலும் குறிச்சிகுளம் எனும் பெயரில் குளம் ஒன்று இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

முதுமக்கள் தாழிகள்: முத்தலூருக்கு செல்லும் முன்னே முத்தலூர் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் வெளிபரப்பில் அடுத்தடுத்து காணக்கிடைக்கின்றன. அகன்ற வாய்களைக்கொண்ட தாழிகளும் அதன் அருகே புதைக்கப்பட்டுள்ள சிறுசிறு பானைகளையும் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது.

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள்

அங்குமிங்குமாக 15க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன. தாழிகள் நிறைந்துள்ள பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களும் பரவலாக காணக்கிடைக்கின்றன. முதுமக்கள் தாழிகள் கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது வியப்பு.

கல்தூண் கல்வெட்டு, எல்லைக்கல்: முற்றியது முத்தல், பழமையான முற்றிய ஊர் முத்தலூராகவும்; புதிதாக உருவாகி சின்ன ஊராக இருந்ததால் சிறிய ஊர் சிற்றலூர், சித்தலூர் எனவும் வழங்கப்பட்டிருக்கலாம். முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, இதில் பல எழுத்துக்கள் சிதைவுற்றுள்ளதால் வாசித்துப் பொருள் கொள்வதில் சிரமம் உள்ளது.

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேம்பத்தூரிலிருக்கும் சமூகம் தர்மம் என தொடங்குகிறது, கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும் மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்க முடிகிறது. மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர்காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் அவர்கள் கள ஆய்வில் தெரிவித்தார்.

சிவகங்கை அருகே முதுமக்கள் தாழிகள் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு

இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும் அதில் நான்கு ஆரங்களும் காணப்பெறுகின்றன. மொத்தத்தில் சித்தலூரும் முத்தலூரும் தொல்லெச்சங்கள் நிறைந்த சிற்றூராக காட்சியளிக்கிறது. இத்தொல்லெச்சங்களை இவ்வூர் மக்களிடத்தும் இளைஞர்களிடத்தும் வெளிப்படுத்தி மேலும் சிதைவுறாமல் பாதுகாக்க சிவகங்கை தொல்நடைக்குழு விரும்புகிறது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ் கொடுத்த அலுவலர் - இது விழுப்புரம் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.