லஞ்ச வழக்கில் கோவில் உதவி ஆணையருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து.!
Published: May 26, 2023, 7:33 PM


லஞ்ச வழக்கில் கோவில் உதவி ஆணையருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து.!
Published: May 26, 2023, 7:33 PM
கோவில் அர்ச்சகரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோவில் உதவி ஆணையருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம்: சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையராக இருந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அந்த கோவிலில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் மீது கோவில் அர்ச்சகர் சரவண குருக்கள் என்பவர் அதே ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்கத மனுவில், கோவில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், பணியில் அமர்த்தப்பட்ட உடனேயே, சுகவனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் வரும் சேலம் ராஜகணபதி கோவில் அர்ச்சகர்களை அழைத்து, தினசரி வரும் கோவில் காணிக்கை வசூலில் இருந்து தனக்கு மாதந்தோறும் மாமூல் வழங்க வேண்டும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவிலில் திருஞானசம்பந்தன் என்பவர் பூஜை செய்ய அனுமதித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், அதை தவிர்க்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சேலம் ஊழல் ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க:சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயகுமார் என்பவர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கில் புகார்தாரரான சரவண குருக்கள், வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்து விட்டதாகவும், லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறி, விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
ஏற்கனவே கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில் பணியாற்றிய போது, வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதேபோல ராஜகணபதி கோவிலில் அபிஷேகம், பூஜைகளுக்கு டிக்கெட் முறையை அமல்படுத்த முயற்சித்ததால், பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடத்தை குறித்து புலன் விசாரணை அதிகாரிகள் விசாரித்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
