கர்நாடக வனத்துறை அத்துமீறல்; தமிழ்நாடு - கர்நாடகா அதிகாரிகள் பேச்சுவார்த்தை!

author img

By

Published : Mar 19, 2023, 12:24 PM IST

Updated : Mar 19, 2023, 1:06 PM IST

Tamil Nadu Karnataka officials engaged in talks regarding the Karnataka Forest Departments attack on Tamil Nadu fishermen

தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடக வனத்துறையின் அத்துமீறல் குறித்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை மாதேஸ்வரன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சேலம்: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பாலாறு, காரைக்காடு, கோவிந்தபாடி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதி மீனவர் மற்றும் பொதுமக்கள் மீது கர்நாடக வனத்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், கடந்த 2014ஆம் ஆண்டு செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் உயிரிழந்தார். அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜா, அடிப்பாலாறு காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். அவர் மான் வேட்டையாடியதாக கூறி கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

ஆனால்,அதனை அம்மாநில வனத்துறை மற்றும் போலீசார் மறுத்தனர். இந்தச் சம்பவங்களால் இருமாநில எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் கோயில் வளாகத்தில் வைத்து நடந்த ஆலோசனையில் சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் ராஜா, மாவட்ட கண்காணிப்பாளர் பத்மினிசஹோ, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோருடன் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த 2014-ல் உயிரிழந்த பழனி குடும்பத்திற்கும், கர்நாடக வனத்துறையால் கடந்த மாதம் 14ஆம் தேதி கொல்லப்பட்ட செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா குடும்பத்திற்கும் கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, மாதேஸ்வரன் கோயிலுக்கு வந்த, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை, சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் தமிழ்நாடு - கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு எல்லையான பாலாறு, செட்டிப்பட்டி, கோவிந்தபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் கர்நாடக வனத்துறை தொடர்ந்து அத்துமீறி தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும், மீனவர்களின் வலையை அறுத்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இதனால் இரு மாநிலத்திற்கும் இடையே பதற்றமான சூழ்நிலை அவ்வப்பொழுது நிலவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு உடனடியாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியர் ரமேஷிடம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்தார்.

கர்நாடக அரசு தமிழகத்திற்குள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட செங்கப்பாடி, கோபி, நத்தம் உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரமேஷ் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும், கர்நாடக மாநிலத்திற்குள் வரும் தமிழர்கள் அன்போடு நடத்தப்படுவார்கள் என்றும்; சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் உறுதி தெரிவித்தார். அதன்பிறகு கர்நாடக வனத்துறை தொடர்ந்து தாக்குவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சதாசிவம், “கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்ட வன அலுவலர் சந்தோஷ் குமார் தொடர்ந்து தமிழக மீனவர்களை குற்றவாளியாக சித்தரித்து பேசியதால் இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும், தமிழக முதலமைச்சரை எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சந்தித்து, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கர்நாடக வனத்துறை சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு பெறவும், இரு மாநில எல்லையில் அமைதி நிலவவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்'' என்று சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?

Last Updated :Mar 19, 2023, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.