கொள்ளுப்பேத்தியுடன் 100ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சேலம் பாட்டி

author img

By

Published : Sep 26, 2021, 9:16 PM IST

100வது பிறந்தநாள் கொண்டாடிய சேலம் மூதாட்டி

கொள்ளுப்பேத்தியுடன் 100ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய சேலம் மூதாட்டிக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சேலம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர், குருபாதம். இவர், பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக அங்கம் வகித்தவர்.

100ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சேலம் பாட்டி

இவரின் மகள் சகுந்தலா தேவசுந்தரம்(100). கோயம்புத்தூரில் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்த இவர் தனது 100 ஆவது பிறந்தநாளை சேலத்தில் தனது மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்தி மற்றும் கொள்ளுப்பேத்தியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

தனது 100ஆவது வயதிலும் கூட யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே சமைத்து சாப்பிட்டு, அவரது தேவைகளை அவரே பூர்த்தி செய்து கொள்கிறார் என்கின்றனர், அவரின் உறவினர்கள்.

அன்றே டிகிரி முடித்த சகுந்தலா பாட்டி

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவரது தந்தை சகுந்தலாவை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார் என்று நெகிழ்கின்றனர், சகுந்தலாவின் வாரிசுகள்.

அவர்கள் மேலும் கூறுகையில், "கணிதத்தில் பட்டம் பெற்ற சகுந்தலா, டெல்லியில் உள்ள பிரபல பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணித மாமேதை ராமானுஜர் தீர்வு கண்டிராத வடிவியல் சூத்திரங்களைத் தீர்வு கண்ட குழுவில் இவரும் ஒருவர்.

டெல்லியில் கணித ஆசிரியராக அவர் பணியாற்றிய போது, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சாகீர் உசேன், வி.வி.கிரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நெருங்கிப் பழகி உள்ளார், சகுந்தலா.

நாட்டின் முக்கியத்தலைவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, அவரின் பேரன்கள் ஒருங்கிணைத்து 100ஆவது பிறந்தநாள் பரிசாக சகுந்தலாவிடம் வழங்கினர்.

இதுகுறித்து சகுந்தலா கூறுகையில், 'கொள்ளுப்பேத்தியுடன் எனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இயற்கையோடு ஒன்றி வாழ்வதாலேயே தற்போதும் எனது தேவைகளை நானே செய்து கொள்ள முடிகிறது. இப்போது உள்ள இளைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

வயதில் சதம் அடித்த சேலம் மூதாட்டி சகுந்தலாவுக்குப் பலரும் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, ஆசி பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளிகளைத் திறக்க வேண்டியது அவசியம் - சௌமியா சுவாமிநாதன் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.