சேலம் : கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கௌதம் ரமேஷ். இவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது நிதி நிறுவனத்தில் ஒருமுறை செலுத்தும் பணத்தை ஒரே ஆண்டில் நான்கு மடங்காக திருப்பி தருவதாக விளம்பரம் செய்து, கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பேரிடம் சுமார் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரிடம் பணத்தை செலுத்திய மக்களுக்கு பணம் திருப்பித் தராமல் இருந்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் கோவை காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த மாதேஷ் உள்ளிட்ட 70 பேர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சேலம் மத்திய குற்றப்பிரிவில் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தனர்.
மேலும் ஒருவர் கைது
அந்த புகாரின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில் கோவையை சேர்ந்த கௌதம் ரமேஷ், அவரது கூட்டாளிகள் ஏராளமானோர் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முக்கிய குற்றவாளியான கௌதம் ரமேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கௌதம் ரமேஷின் நண்பர் கனகராஜ் கோவையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் கோவை சென்று கனகராஜை இன்று (செப்.26) கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரிடமிருந்த இரண்டு ஏடிஎம் கார்டு மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது