சேலம்: சிவதாபுரம் அடுத்த கந்தம்பட்டி நாகமலையான் தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் பண்ணை குட்டை அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது.
இதனை அறிந்த மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை அமைத்து மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் மோகன்ராஜ் தனக்கு சொந்தமான நிலத்தை வருட வாடகைக்கு மணிகண்டன் என்பவருக்கு விட்டதும், அவர் கடந்த ஒன்றரை வருடமாக பண்ணைக் குட்டை அமைத்து ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட 500 கிலோ எடையிலான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை குழி தோண்டி குளோரின் பவுடர் தெளித்து புதைத்து அழித்தனர்.
இது குறித்து மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் யுவராஜ் கூறுகையில் இது போன்று மீன் வளர்ப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி குற்றம் என்றும் மீன்கள் வளர்த்து விற்பனை செய்த மணிகண்டன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உணவகத்தில் அழுகிய நிலையில் மீன்கள்...வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி