இதுவரை 1,600 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Dec 13, 2021, 6:10 PM IST

அமைச்சர் சேகர்பாபு

கடந்த 6 மாதங்களில் இதுவரை 1,600 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிசம்பர் 13) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சேகர்பாபு, "தமிழ்நாட்டில் வரும் 7 மாதங்களில் 551 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த கோயில்களுக்கு பேருந்து வசதிகள், கழிவறை வசதிகள், மலைப்பாதையில் உள்ள கோயில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி, தானியங்கி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் மீட்பு

வரும் 5 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொழி, இன, சாதி, மதங்களைக் கடந்து இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.

பழனி கோயிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோளிங்கரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அமைச்சர் சேகர்பாபு

ரோப் கார் இயக்க நடவடிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "சோளிங்கர் நரசிம்மர் சாமி கோயிலுக்கு வரும் ஆறு மாத காலத்திற்குள் ரோப் கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலில் பாதுகாப்புக் கருதி மூன்று மாத காலத்திற்குள்ளாக வெள்ளோட்டம் விடப்பட்டு, பின்னர் ரோப் கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக அவசியம் தேவைப்படுகின்ற இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.