ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (21). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயலிங்கம் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் சம்மதிக்கவில்லை.
இதனால் அவ்வபோது இவர்களுக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் விஜயலிங்கம் தனது வீட்டில் தனி அறையில் தனியாக மல்லிகாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மல்லிகா விஜயலிங்கத்தின் குடும்பத்தார் தன்னை வரதட்சனை கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒருகட்டத்தில் குடும்பத்தகராறு முற்றவே விஜயலிங்கம், மல்லிகா தம்பதியினர் மல்லிகாவின் தாயார் வீட்டிற்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள் வசித்து வந்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த மே 21-ஆம் தேதி விஜயலிங்கத்தின் தாயார் விஜயலிங்கத்திற்கு போன் செய்து, 'நீயும் மல்லிகாவும் வீட்டிற்கு வந்து விடுங்கள், நான் மீண்டும் இதுபோன்று சண்டையிட மாட்டேன்' என உறுதி அளித்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அன்று அவர்களுக்கு கறி விருந்து படைத்துள்ளார். மேலும் அன்று மாலையே விஜயலிங்கத்திற்கும் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கையெழுத்திட சொல்லி கணவர் - மனைவி இருவரும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் வாய்த்தகராறு கை தகராறாக மாறியுள்ளது.
ஒருகட்டத்தில் விஜயலிங்கம் மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துவிட்டு இந்தப் பிரச்னையை சுமுகமாக பேசி முடிக்க கிருஷ்ணாபுரத்திலேயே தங்கியுள்ளார். அன்று இரவு 2 மணி அளவில் மல்லிகாவிடம் போனில் உரையாடியுள்ளார். இந்நிலையில் மே 22ஆம் தேதி காலை 6 மணி அளவில் விஜயலிங்கம் இறந்துவிட்டதாக அண்டை வீட்டார் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த மல்லிகா தன் மாமியாரிடம் சென்று விஜயலிங்கத்தின் மரணத்திற்கான காரணத்தை அறிய முயன்றுள்ளார், மல்லிகாவை சரமாரியாக தாக்கிய அந்தக் குடும்பத்தினர் பின்னர் அவசர அவசரமாக விஜயலிங்கத்தின் உடலை புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மல்லிகா தன் கணவரின் சாவிற்கு காரணம் அறிய முயற்சித்தபோதெல்லாம் அவர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மல்லிகா விஷம் குடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாள்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
தற்போது தனது கணவர் இறப்பில் மர்மம் இருக்கிறது. தனது கணவர் உடலைத் தோண்டி உடற்கூராய்வு மேற்கொள்ள வேண்டும். அவர் இயற்கையாக உயிரிழந்திருக்க மாட்டார்.
எனவே அவரை திட்டமிட்டு அவரது தாய் கிருஷ்ணவேணியும் அவரது தம்பி சண்முகராஜனும் கொலை செய்திருப்பதாக சந்தேகம் உள்ளது. மேலும், எனவே தனது கணவரின் மரணம் குறித்த காரணத்தை அறிய அவரது உடலை மீண்டும் தோண்டி உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.