குழந்தை இல்லாத மருமகளிடம் அத்துமீறிய மாமனார்... உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகள்

author img

By

Published : Aug 22, 2021, 9:09 AM IST

பாலியல் தொல்லை

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனாரை உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகளை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அசோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

குழந்தை இல்லாத மருமகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை

நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாததால், இந்தத் தம்பதியினர் விரத்தியில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், மருமகள் திவ்யாவுக்கு மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திவ்யா தனது கணவர் அசோக்கிடம் பலமுறை இதுகுறித்து கூறியுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

ஆனால், அதற்கு தனது தந்தை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று மழுப்பலாக அசோக் பதில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உணவில் எலி பேஸ்ட்

இதையடுத்து திவ்யா கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு, தான் சமைத்த உணவில் எலி பேஸ்ட், குருணை மருந்து இரண்டையும் கலந்து மாமனாருக்கு கொடுத்துள்ளார்.

மாமனார் முருகேசன் இது குறித்து அறியாமல் சாப்பிட, சிறிது நேரத்தில் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கால் சுருண்டு விழுந்துள்ளார். தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அடுத்த நாள் (ஆக.01) சிகிச்சைப் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். தொடர்ந்து, உணவில் விஷம் வைத்து கொலை செய்த திவ்யா, அதனை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார்.

மன அழுத்தத்தில் வாக்குமூலம்

இந்த நிலையில் தான் செய்த கொலையால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்த திவ்யா, நேற்று (ஆக.21) தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவர் ஹரி கிருஷ்ணன் கீழத்தூவல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், சிறிது நேரத்தில் திவ்யாவை கீழத்தூவல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் உணவில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மழைநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.