புதுக்கோட்டை: புல்வயல் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் சரிதா ஆகிய இருவர் மீது இடப் பிரச்னை காரணமாக சாந்தி என்பவர், அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ராமசாமி மற்றும் சரிதா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கிற்கும் ராமசாமி மற்றும் சரிதாவிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, அவர்களை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும்,
பொய்யான புகார் அளித்த சாந்தி மற்றும் அவருடைய கணவர் உலகப்பனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் புல்வயல் உள்ளிட்ட 18 பட்டி கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் புதுக்கோட்டை- குடுமியான்மலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னவாசல் காவல் நிலைய காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்பட்டு பொய்யான புகார் அளித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் பாஜக சார்பில் பொங்கல் விழா