முதியவரை அறைந்த தலைமைக் காவலர் பணியிடமாற்றம்!

author img

By

Published : Aug 14, 2021, 10:08 PM IST

முதியவரை அறைந்த தலைமைக் காவலர் பணியிடமாற்றம்

புகார் தொடர்பான விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முதியவரை அறைந்த தலைமைக் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது உறவினர் ராதாகிருஷ்ணன். இருவருக்கும் குப்பையை கொட்டுவதில் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, தலைமைக் காவலர் முருகன் விசாரித்திருக்கிறார். அப்போது விசாரணையின்போது ராதாகிருஷ்ணனுக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

முதியவர் கன்னத்தில் அறைந்த காவலர்

இதில் கோபமடைந்த காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி, எழுந்து வந்து கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

காணொலியைக் கண்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக காவலர் முருகனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்ததுடன், புகார் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.