பெரம்பலூர்: ஆடி மாதம் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் ஒரு வார காலத்திற்கு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கோயில் வர, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஆடி 18ஆம் நாள் உள்ளிட்ட பல்வேறு கோயில் விழாக்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களில், சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செட்டிகுளம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரஸ்வரர் திருக்கோயில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில், பெரம்பலூர் அருள்மிகு மதனகோபாலசாமி திருக்கோயில், பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சு. ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளிட்ட மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.