பெரம்பலூரில் கண்டறியப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு!

author img

By

Published : Aug 22, 2021, 8:26 AM IST

கல் செக்கு

பழங்காலத்தில் உணவு, மருந்து பயன்பாடுகளுக்கும், கோயில், வீடுகள், தெருக்களில் விளக்கு எரித்தல் முதலிய பயன்பாடுகளுக்காகவும் பலவிதமான எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்க செக்குகள் பயன்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் சுமார் 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

பொறிக்கப்பட்ட கல் செக்கு

இது குறித்து தகவல் அறிந்து வரலாற்று ஆய்வாளர், முனைவர் செல்வ பாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வலர் வசந்தன் ஆகியோர் முன்னதாக வெங்கலம் கிராமத்திற்குச் சென்று செல்லியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

கல் செக்கு
கல் செக்குடன் சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வலர் வசந்தன்

அப்போது செல்லியம்மன் கோயிலின் முன்புறம் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கல் செக்கினை அவர்கள் கண்டறிந்தனர். தரையிலிருந்து இந்தக் கல் செக்கானது 33 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 71 செ.மீ., உள் விட்டம் 64 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது.

செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். செக்கின் பக்கவாட்டுப் பகுதியில் இரண்டு வரிகளில், "ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்)செக்குப் பந்தல் லம்பலம்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

கல் செக்கு
கல் செக்கு

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல் செக்கு சுமார் 900 ஆண்டுகள் பழமையானதாகும்.

இந்நிலையில், ஆய்வுகள் முடிந்து பேசிய வரலாற்று ஆய்வாளர் ம.செல்வபாண்டியன் ”வெங்கலம் சிவன் கோயிலில் உள்ள கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டின் வழியாக இவ்வூரின் பெயர் வெண்குளம் என்பதும், இவ்வூர் சோழர் காலத்தில் வணிக நகராக விளங்கியது என்பதும் தெரிய வருகிறது.

கல் செக்கின் வரலாறு

பழங்காலத்தில் உணவு, மருந்து பயன்பாடுகளுக்கும், கோயில், வீடுகள், தெருக்களில் விளக்கு எரித்தல் முதலிய பயன்பாடுகளுக்காகவும் பலவிதமான எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அச்சமயங்களில் எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்க செக்குகள் பயன்பட்டன.

இதற்கென அரசர்கள், படைத்தலைவர்கள், செல்வர்கள் ஆகியோர் கோயில் வழிபாட்டுக்கும் பொதுப் பயன்பாட்டுக்கும் கல்செக்குகளை செய்து தானமாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை வேலூர் ஆகிய கிராமங்களில் இத்தகைய கல் செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

கல் செக்கு
கல் செக்கு

மற்ற ஊர்களில் 18, 20ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்பட்டாலும் ,வெங்கலத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டுதான் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழமையான கல்வெட்டாகும்.

கடந்த கால வரலாற்றை எதிர்கால தலைமுறைக்கு பறைசாற்றும் கல் செக்கு

மல்லடி நாட்டான் என்பவரே இந்தக் கல் செக்கினைச் செய்து கொடுத்திருக்கிறார். இவர் யாரெனத் தெரியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும். இது தற்போதைய செல்லியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியைக் குறிக்கலாம். தற்போதும் இந்தக் கல் செக்கு பயன்பாட்டில் உள்ளது.

வருங்கால தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும் இந்த அரிய வரலாற்றுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மழைநீர் கால்வாய் அடைப்பை சீர்செய்த காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.