7-ஆவது நபரை திருமணம் செய்ய முயற்சி ..ஸ்கெட்ச் போட்டு பிடித்த 6-ஆவது கணவர்...

author img

By

Published : Sep 23, 2022, 2:18 PM IST

திருமணம் செய்ய முயன்ற மனைவி

7-ஆவது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரை 6- வது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சுற்றிவளைத்து பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா(26) என்பவருக்கும் கடந்த 7-ஆம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர்.

அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கர் கமிஷன் ரூ 1.50 லட்சத்தை கையோடு வாங்கி சென்றனர். தனபாலும் திருமணம் முடிந்ததால் புது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி தனபாலின் வீட்டிலிருந்து சந்தியா மாயமானார். அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த தனபால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு சந்தேகமடைந்தார்.

பின்னர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த நகைகள் மற்றும் திருமண புடவைகள் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனையடுத்து சந்தியாவின் உறவினர்கள் மற்றும் புரோக்கர் பாலமுருகன் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களின் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தனபால் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருமணம் செய்ய முயன்ற மனைவி மற்றும் குடும்பத்தினர்
திருமணம் செய்ய முயன்ற மனைவி மற்றும் குடும்பத்தினர்

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, மதுரையை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமி என்பவர் மூலம் மீண்டும் சந்தியாவின் புகைப்படம் வந்துள்ளது. இதனை அறிந்த தனபால் திட்டம் தீட்டி மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்தார். அதன்படி, புரோக்கர் தனலட்சுமியிடம் பேசி திருமணத்தை திருச்செங்கோட்டில் நடத்தலாம் என முடிவு செய்தனர்.

அத்திட்டத்தின்படி நேற்று(செப்.22) மணப்பெண் கோலத்தில் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் மற்றும் ஜெயவேல் ஆகியோர் காரில் வந்து திருச்செங்கோட்டில் இறங்கினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரையும் பரமத்திவேலுார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மணப்பெண் சந்தியா புரோக்கர்கள் மூலம் திருமணம் செய்து கொண்டு ஓரிரு நாட்கள் மட்டுமே அவர்களுடன் இருந்து விட்டு கையில் கிடைத்த அனைத்தையும் அள்ளி கொண்டு கம்பி நீட்டுவது வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் புரோக்கர் கமிஷன் தொகையை மற்ற அனைவரும் பங்கிட்டுக் கொள்வதும் தெரியவந்தது. சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்கள் நடந்துள்ளதாகவும், 6-ஆவது திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் 7-ஆவது திருமணம் செய்ய வந்த போது வசமாக சிக்கி கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மோசடி பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் மற்றும் காரை ஓட்டி வந்த ஜெயபால் ஆகியோரை பரமத்திவேலுார் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் மற்றொரு புரோக்கர் பாலமுருகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய மனைவி? - திடுக்கிடும் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.