கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் கட்டடம் இடிக்கப்படும் - நீதிமன்றம்

author img

By

Published : Mar 25, 2022, 9:11 PM IST

Temple Construction on Land Encroachment

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை எனவும்; கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற உத்தரவிடப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்து அமைந்த இடத்திற்குச் செல்லும் வழியைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி, பாப்பாயி என்பவர் தொடர்ந்த வழக்கில், நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோயில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "குறிப்பிட்ட பொது பாதையில் கோயில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

கடவுளையும் விட்டுவைக்காத நீதிபதி: அதேசமயம், பொதுசாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோயிலாக இருந்தாலும், அதை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோயில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, போதுமான எண்ணிக்கையில் கோயில்கள் உள்ளதாக கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.