நாமக்கல்: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகரமன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று 2021-2022ஆம் கல்வியாண்டில் பயின்ற 222 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
முன்னதாக மிதிவண்டி இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பள்ளிக்கு கொண்டு வருவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வருவதற்குப் பதிலாக நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாக குப்பை வாகனத்தில் மிதிவண்டி கொண்டு வந்து இறக்கப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் குப்பைகளை அள்ளி செல்வது போல மிதிவண்டிகளை குப்பை வண்டியில் அள்ளி வந்ததால் மாணவர்களுக்கு வழங்கிய பெரும்பாலான மிதிவண்டிகள் சேதம் அடைந்து காணப்பட்டன. எனவே, இனி வரும் காலங்களில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் பொருட்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நட்புறவுடன் இருக்கும் கலாச்சாரம் தற்போது இல்லை.. தமிழிசை சௌந்தரராஜன்