நாமக்கல் முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

author img

By

Published : Aug 12, 2022, 7:50 AM IST

Updated : Aug 12, 2022, 11:20 AM IST

நாமக்கல் முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தவர், கே.பி.பி.பாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாஸ்கர், அவரது மனைவி உமா மற்றும் தனது பெயரிலும் சட்டவிரோதமாக நிலம், நகை, சொத்துக்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் இருந்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 7.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பில் சட்ட ரீதியாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நகைகளை தவிர, சட்ட விரோதமாக 4.72 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரின் வருமானத்தை விட 315% அதிகம் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

அதேநேரம் 2016 ஆம் ஆண்டு நடத்தி வந்த தனியார் போக்குவரத்து நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு பிறகு, படிப்படியாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், அவரது மனைவி உமா மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயரிலும், தனது பணிக்காலத்தில் ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.

நாமக்கல் முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமாக மதுரையில் உள்ள நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

இது அவருடைய வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 11), நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக அவர்களுக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கலில் 24 இடங்களிலும், மதுரை மற்றும் திருப்பூரில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மதுரை கே.கே நகர் முதல் வீதி அருகே உள்ள ஆர்.ஆர்.இன்பிரா கன்ஸ்ட்ரக்சன் என்ற அவரது நண்பருக்கு சொந்தமான நிறுவனத்தில் 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Last Updated :Aug 12, 2022, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.