அரசு வேலையை வரதட்சனையாக கேட்ட கணவன்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு!

அரசு வேலையை வரதட்சனையாக கேட்ட கணவன்.. மனைவி எடுத்த அதிரடி முடிவு!
மயிலாடுதுறை அருகே ரூ.30 ஆயிரம் சம்பளத்துடன் அரசு வேலை மற்றும் மாடி வீடு கட்டித் தர வேண்டும் என வரதட்சனை கேட்டு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மயிலாடுதுறை: காளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுக்கா சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்தது.
திருமணத்தின்போது 16 சவரன் நகை, புல்லட் பைக், மரபீரோ, மரகட்டில் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை சீதனமாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், திருமணம் ஆனதற்கு பிறகு பவித்ராவை கணவர் ரஞ்சித் மற்றும் உறவினர்கள் பல்வேறு முறையில் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கணவரின் உறவினரான மன்னம்பந்தல் ஊராட்சிமன்ற தலைவர் பிரியா என்பவரை ரஞ்சித் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தற்போதும் அவருடன் தொடர்பிலிருக்கும் ரஞ்சித், இருவரும் சேர்ந்து பவித்ராவை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
திருமணமாகி இரண்டு மாதத்திலியே, தாலியை அறுத்துவிட்டு அடித்து துன்புருத்தி தாய்வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், மாதம் ரூ30 ஆயிரம் சம்பளத்துடன் அரசு வேலை வாங்கித் தர வேண்டும் எனவும் மாடி வீடு கட்டித் தர வேண்டும் எனவும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக பவித்ரா குற்றம்சாட்டுகிறார்.
இது தொடர்பாக ஜன.14ஆம் தேதியன்று சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரியா, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பவித்ராவையும் அவரது குடும்பத்தினரையும் காவல் துறையினர் மூலம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், காவல் துறையினர் தன் மீது நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்வதா கூறி இன்று (ஜன.23) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பவித்ரா மனு அளித்தார். மேலும், இவ்விவகாரத்தில் தொடர்புடைய ஊராட்சி மன்ற தலைவர், தனது கணவர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
