தொடர் கொள்ளை: ஹெல்மெட் கொள்ளையன் சிக்கியது எப்படி?

author img

By

Published : Oct 8, 2021, 8:51 AM IST

helmet robber arrested in mayiladuthurai

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பூட்டிய கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையனை மயிலாடுதுறையில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பூட்டிய கடைகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் கண்காணிப்பில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உட்கோட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தலைக்கவசம் அணிந்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு, பின்னர் தலைமறைவானது தெரியவந்தது.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் ஒரு கடையின் பூட்டை உடைக்க முயன்ற நபரை அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அவரை அடையாளம் கண்டறிந்து கைதுசெய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்த காத்தமுத்து மகன் லட்சுமணன் (42) என்பதும், அவர் கடந்த மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற கடை உடைப்புச் சம்பவம், கடந்தாண்டு நடைபெற்ற மற்றொரு கடை உடைப்புச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர் மீது பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் புலப்பட்டது.

இதையடுத்து, லட்சுமணனைக் கைதுசெய்த மயிலாடுதுறை காவல் துறையினர் அவரிடமிருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய வாகனம், ஆயுதங்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பிரியாணி கடையில் மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.