மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் சின்னதம்பி (28). இவர், வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்.
இவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வில்லியநல்லூர் மேட்டுத்தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் அபிநயா (18) என்ற பெண்ணை கடந்த ஜூன் 28ஆம் தேதி மணமகன் வீட்டார் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இதையடுத்து, அப்பெண்ணிற்கு 2 பவுன் தங்க செயின், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை சின்னதம்பி வாங்கித்தந்துள்ளார்.
அதன்பின்னர் சின்னதம்பி கடந்த 15ஆம் தேதி அபிநயாவின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது அவர்கள், அபிநயாவைக் காணவில்லை என்றும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நான் வரமாட்டேன்
அதன்பின் அபிநயாவிடம் ஒருமுறை சின்னதம்பி செல்போனில் பேசியுள்ளார். அதற்கு அப்பெண், " நான் வரமாட்டேன், நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள், இது என் பெற்றோருக்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் பெண், அவரின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட பொருள், பணத்தை சின்னதம்பி திருப்பி கேட்டுள்ளார்.
மணப்பெண் வீட்டார் அலைக்கழிப்பு
அதனை திருப்பி தராமல் மணமகன் வீட்டாரை மணப்பெண் வீட்டார் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து, சின்னதம்பி, அவரது பெற்றோர் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திலும், மணல்மேடு காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சீட்டு மோசடி... சிக்கவைத்த தடுப்பூசி தகவல்: 2 ஆண்டுகளுக்குப் பின் பெண் கைது!