போலீஸ் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட அரசியல் கட்சி நிர்வாகியின் தந்தை

author img

By

Published : May 12, 2022, 7:05 AM IST

போலீஸ் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட நா.த.க பிரமுகரின் தந்தை

மயிலாடுதுறை அருகே காவலர் ஆய்வாளர் அவமானப்படுத்தியதால் நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளரின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறி, இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே தேரிழந்தூரில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளரின் தந்தையை குத்தாலம் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர் சிவன் கோயில் வடக்கு வீதியைச் சேர்ந்த அர்ஜூணன்(60). இவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் சென்னை அடையாறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவது வழக்கம்.

அவமானப்படுத்திய காவலர்: இந்நிலையில், இவரது மூத்த மகன் ஜெயவசந்தனுக்கும் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ள மணிகண்டன் என்பவருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குத்தாலம் போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளரும், இவரது இளைய மகனான ஜெயசீலன், மணிகண்டன் கடையில் கள்ளநோட்டு வைத்துவிட்டுச் சென்றதாக புகாரின் பேரில் போலீசார் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயசீலனைப் பிடிப்பதற்காகச் சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, ஜெயசீலன் எங்கே..? என்று கேட்டு தந்தை அர்ஜுனணைத் தகாத வார்த்தையால் பேசி கையைப் பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மன உளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை: இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று(மே 10) இரவு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும், ஜெயசீலன் அவரது அண்ணன் ஜெயவசந்தன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவதாகவும் அக்குடும்பத்தினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 11) அதிகாலையில் அர்ஜுணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த அர்ஜுணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம்தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், லாமேக் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில் அர்ஜுணன் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், ஜெயசீலன், ஜெயவசந்தன் வழக்குகளை வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அர்ஜுணன் உடலை பெற்றுச்சென்றனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு, உறவினர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.