பள்ளியில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூன்று பேர் கைது

author img

By

Published : Aug 3, 2022, 5:24 PM IST

பள்ளியில் மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூன்று பேர் கைது

சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தைச்சேர்ந்தவர் பூபாலன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த பூபாலன் தற்சமயம் விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி உள்ளார்.

வீட்டின் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்குடியைச்சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் மது அருந்தி உள்ளனர். 'பள்ளி வளாகத்தில் ஏன் மது அருந்துகிறீர்கள்?' என்று பூபாலன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று பேர் கொண்ட அந்தக்கும்பல் பூபாலனிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த பூபாலனை மீண்டும் வழிமறித்து பிரகாஷ் உள்ளிட்ட நபர்கள் மிரட்டி உள்ளனர்.

மேலும் ’உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம்’ எனவும் எச்சரித்துள்ளனர். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் பூபாலன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேர், பூபாலன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். நல்வாய்ப்பாக அந்த குண்டு வீட்டின் சுவற்றின் அருகே விழுந்து வெடித்ததில் அங்கிருந்த மரம் பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பூபாலன் குடும்பத்தினர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சீர்காழி காவல் துறைக்குத்தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பூபாலன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வள்ளுவக்குடி பகுதியைச்சேர்ந்த ஐயர் என்கிற ஜெயப்பிரகாஷ், அவரது நண்பர்கள் பாலமுருகன், கதிர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.