இதுகுறித்து நம்மிடம் பேசிய விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான மகாலிங்கம், "தமிழ் தகவல் அடங்கிய விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்போது பல மட்டங்களில் பரவலாக்கி வருகிறோம்.
இதன் அடிப்படையில் ஒருநாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றுவருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த கட்டுரைகள் குறித்தும், மொழிபெயர்க்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறது" என்றார்.
’அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்ல திட்டம்’
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'களம்' அமைப்பின் நிறுவனர் வரதராஜன் கூறுகையில், "தமிழ் மொழியின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும், இந்த பயிற்சியானது தென் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகும். அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்பயிலரங்கு மாதந்தோறும் நடைபெறவுள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன" என்றார்.
’கூகுள் மொழிபெயர்ப்பை சரிசெய்ய பயிற்சி’
கூகுளின் அவசியம் குறித்தும், அதில் தவறுகள் செய்வதன் அவசியம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்ட கணினி பொறியில் துறைத்தலைவர் அரண், "இந்தக் காலத்தில் மாணவர்கள் நூல்களிலிருந்து தரவுகளை தேடுவது குறைந்துவிட்டது. கூகுளில்தான் தேடுகின்றனர்.
அப்படியானால், அவர்கள் கூகுளில் தோன்றும் தகவல்கள் உண்மைத்தன்மையாகவும், பிழையின்றியும் இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றுவருகிறது. கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளில் நிகழக்கூடிய பிழைகளையும், சரிசெய்வதற்கான பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்" என்றார்.
’விக்கிப்பீடியா அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும்'
பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் எங்களிடம் பேசுகையில்,"தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்; அதேநேரம் அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியின் வளர்ச்சி இன்னும் விரிவாகும். ஆகையால் இதுபோன்ற பயிலரங்குகள் எங்களுக்கு மட்டுமன்றி மொழி வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமையும்" என அவர் தெரிவித்தார்.