கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி!

author img

By

Published : Nov 24, 2022, 9:40 PM IST

கணவரை கொல்ல கள்ளக்காதலனுடன் ஸ்கெட்ச் போட்ட மனைவி

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என எண்ணி கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி, வழக்கை திசை திருப்புவதற்காக சிபிசிஐடி விசாரணை கேட்ட நிலையில், சிக்கிக்கொண்டார்.

மதுரை: திருப்பாலை GR நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35), பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும் (24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இதன்படி கடந்த மாதம் 27-ம் தேதி மதுரைக்கு வந்த அவர் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீட்டிற்கு வந்தபோது, பொன்விழா நகர் பகுதியில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், பைக் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி வைஷ்ணவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ”பூர்வீக சொத்து பிரச்சனையால் முன்விரோதம் இருந்ததால் செந்தில்குமாரின் அண்ணன் தான் ஆட்களை வைத்து அவரை கொலை செய்ய முயன்றிருப்பார்” என மனைவி வைஷ்ணவி கூறியுள்ளார். இதன் அடிப்படையில், திருப்பாலை காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கணவர் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மனைவி வைஷ்ணவி மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, செந்தில்குமார் தாக்கப்பட்டது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வழக்கு விசாரணையை தனிப்படையினர் தொடங்கியவுடன் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து விசாரணையை மேற்கொண்டனர். அதில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து வைஷ்ணவிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவியின் தாய்மாமன் மகனான வெங்கடேசனுடன்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இவ்வளவு நாள் வீட்டில் இல்லாத கணவர் செந்தில்குமார் தற்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால், இருவராலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் கணவரின் ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று வைஷ்ணவி தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து வெங்கடேசன் தனது நண்பரும், கூலிப்படையை சேர்ந்தவருமான சாந்தகுமாரிடம் ’ரூ.1 லட்சம் தருகிறேன் செந்தில்குமாரை வெட்ட வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்காக மனைவி வைஷ்ணவி தனது நகைகளை சிவகங்கை பகுதியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின் தான் சாந்தகுமாரும், மற்றொருவரும் செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து வைஷ்ணவியையும், வெங்கடேசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: செவிலியரை மணக்கும் ஆசையில் காதல் மனைவியை கொலை செய்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.