ஈராயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர் திருவிழா ஜல்லிக்கட்டு!

author img

By

Published : Jan 12, 2022, 7:03 PM IST

Jallikattu

ஜல்லிக்கட்டு விளையாட்டல்ல, தமிழர்களின் வாழ்வியல். இந்த 2 ஆயிரம் ஆண்டு கால பண்பாட்டுத் திருவிழாவான ஜல்லிக்கட்டு குறித்து பார்க்கலாம்.

மதுரை : 2,000 ஆண்டு கால பண்பாட்டுத் தொடர்ச்சியாகவும், தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தும் விளங்குகின்ற ஜல்லிக்கட்டு, பண்டைய காலத்தில் ஏறு தழுவுதல் என்ற பெயரால், பெருவிழாவாக நிகழ்ந்ததென சங்கத் தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறியப்படுகிறது.

கி.மு.1500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளி நாகரிகத்திலேயே ஏறுதழுவுதல் இருந்துள்ளதாக தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபாகும்.

காளைகள் இல்லா வீடு அரிது

தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்திற்குச் சென்றாலும் காளைகள் இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகும். பண்பாடாக மட்டுமன்றி, ஒவ்வொரு கிராமத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான திறவுகோலாகவும் காளைகள் திகழ்கின்றன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் முல்லைத் திணையில்தான் காளைகள், பசுக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கூரிய கொம்புடைய காளையின் திமிலைத் தழுவி, கொம்புகளைப் பற்றுவது வீரச் செயலாகவே இன்றளவும் போற்றப்படுகிறது.

காளை வளர்ப்பு

மதுரை கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர், 1990 முதல் மாடுபிடி வீரராக களத்தில் உள்ளார். இவர், தற்போது, வடமாடு, வாடிவாசல் மற்றும் வெளிவட்டுக் காளைகள் என மூன்று வித ஜல்லிக்கட்டுகளுக்கான காளைகளை வளர்த்து வருகிறார்.

தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

பொதுவாகவே ஜல்லிக்கட்டுக்கான காளைகள் வளர்ப்பு என்பது மிக நேர்த்தியான கலை. வழக்கமான காளை, பசுக்கள் போன்று அல்லாமல், சிறப்புக் கவனமும், பயிற்சியும் கொடுத்து அவை வளர்க்கப்பட வேண்டும்.

நாள்தோறும் நடைப்பயிற்சி, போட்டி நெருங்கும் நாள்களில நீச்சல் பயிற்சி என காளைகளைத் தயார்ப்படுத்துவது மிகப் பெரிய வேலை. அக்கம்பக்கத்து நண்பர்களும் இதற்கு உதவ வேண்டும்.

இளம் வீரர்களுக்கு பயிற்சி

மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அழகர்சாமி, 'எங்களது ஊரில் இளம் வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கென்றே ஆர்எஸ் என்ற பெயரில் அமைப்பையே உருவாக்கியுள்ளோம். அதில் இளம் மாணவர்களுக்கு காளைகளைப் பிடிப்பது குறித்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம்' என்றார்.

வழக்கமாக மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கும் வைக்கோல், புல், புண்ணாக்கு, துவரந்தூசி, பாசித்தூசி ஆகியவற்றை நிறுத்திவிட்டு, ஜல்லிக்கட்டுக்காக தயாராகின்ற நாள்களில் பருத்திவிதை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்ற சத்தான உணவு வகைகளை வழங்கி காளைகளை வலுப்படுத்துகின்றனர். அதேபோன்று விளையாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

நாட்டு இன மாடுகள் பாதுகாப்பு

காளைகள் தவிர்த்த வாழ்வியலை தமிழக கிராமப்புறங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நாட்டு இன மாடுகளைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த உத்தியாக காளை வளர்ப்பை தமிழர்கள் ஊக்குவிக்கின்றனர்.

தேனூரைச் சேர்ந்த காளை உரிமையாளர் கருப்பணசாமி என்ற காளை உரிமையாளர் கூறுகையில், 'பாரம்பரிய நாட்டு இனங்களைக் காப்பாற்றுவதற்காக, ஜல்லிக்கட்டு போட்டிகளை வளர்ப்பதற்காக நான் காளைகளை வளர்த்து வருகிறேன். ஆனால், இதற்கு எதிராக இருக்கக்கூடிய பீட்டா போன்ற அமைப்புகளை முற்றிலும் புறக்கணிக்கிறோம். இந்தப் பாரம்பரியத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக நிற்பதுபோல், இனி வருங்காலங்களிலும் நிற்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்' என்கிறார்.

தமிழர் திருவிழா

மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள், வெறும் போட்டிகளாக மட்டுமன்றி... பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்கின்ற பண்பாட்டு செயல்முறையாகவும், சூழல் காக்கும் மரபின் தொடர்ச்சியாகவுமே நிற்கின்றன.

இந்த ஈராயிரம் ஆண்டு பாரம்பரியம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடு!

இதையும் படிங்க: 'அஞ்சாத சிங்கம் என் காளை... அது பஞ்சா பறக்கவிடும் ஆளை'- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.