சிவகங்கையில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

author img

By

Published : Feb 23, 2022, 7:00 PM IST

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

சிவகங்கையில் பிப்ரவரி 26ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை: சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி கிராமத்தில் மாசி மாதம் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த 6 வருடங்களாக இப்பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பொறுத்தவரை குறைந்த அளவு மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்காக பிப்ரவரி 9ஆம் தேதி அலுவலர்களிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜல்லிக்கட்டு போட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி போன்றவை நடத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டம், அழகமாநகரி கிராமத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியளித்து காவல் துறை பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வேண்டுமென்றே பொய் வழக்கு: ஜெயக்குமாரின் மகன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.