'இப்படிதாங்க மாடு பிடிக்கணும்..' - ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடிப்பதற்கான விதிமுறைகள்

author img

By

Published : Jan 13, 2022, 3:40 PM IST

Updated : Jan 13, 2022, 3:58 PM IST

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், மாடு பிடிப்பதற்கும், காளை வெற்றி பெறுவதற்குமான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மதுரை : மதுரை மாவட்டத்தில் தைத்திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக, முதல் போட்டியாக மதுரை அவனியாபுரத்தில் நாளை (ஜன.14) தொடங்குகிறது. மாடு பிடிப்பதற்கும், காளை வெற்றி பெறுவதற்குமான விதிமுறைகள் என்னென்ன..? என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் நடைபெற்றாலும், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளே உலகப்புகழ் பெற்றவையாகும்.

இந்த மூன்றில் பங்கேற்பதற்காக காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் 'பிரம்ம பிரயத்தனம்' மேற்கொள்வார்கள். மேற்கண்ட மூன்று வாடிவாசல்களில் இறங்கிவிட்டாலே 'ஆஸ்கர்' விருது பெற்றதற்கு சமம் என நினைப்பவர்களே அதிகமுண்டு.

மாடுபிடி வீரர்களுக்கு தகுதிச் சான்று
பல்வேறு தகுதிச் சான்றுகளின் அடிப்படையிலேயே வீரர்களும், காளை மாடுகளும் கால்நடை மருத்துவத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், மருத்துவர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பாக, உள்ளூர் கோயில் காளைகள் வாடியிலிருந்து அவிழ்த்து விடப்படுவது வழக்கம்.

இந்தக் காளைகளை யாரும் தொடக்கூடாது என்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் நடைமுறையாகும். அதுமட்டுமன்றி உள்ளூரைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 77 நடைமுறைகளைப் பின்பற்றியே கடந்த 2017க்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

புறவாடியில் வரிசையாக நிறுத்தப்படும் காளைகள் அனைத்தும் எண் வரிசைப்படி டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அழைக்கப்படுகின்றன. அப்போது காளையுடன் வருகின்ற உரிமையாளரோ அல்லது உதவியாளர்களோ காளைக்கு கட்டப்பட்டுள்ள மூக்கணாங்கயிற்றை வாடிக்குள் வைத்து அவிழ்க்கின்றனர்.
தோட்டா போன்று சீறி பாயும் காளைகள்
வாடிவாசலின் உள்ளேயிருந்து தோட்டாக்களைப் போன்று சீறிப்பாயும் காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் முன்பாக குழுமி போட்டி போட்டுக்கொண்டு நிற்பர். தற்போது வீரர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு சுற்றுகளாக நடைபெறும்.

ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் பனியன் மற்றும் அரைக்கால் சட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும் 75லிருந்து 100 வீரர்கள் இடம் பெறுவர். இந்தச் சுற்றுகளின் எண்ணிக்கை காளையைப் பொறுத்தும் வீரர்களைப் பொறுத்தும் மாறுபடும் மாலை 4 மணி வரை சுமார் 8 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறும்.

திமிலை பிடிக்க வேண்டும்

ஒவ்வொரு சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் காளையைப் பிடித்த வீரர்கள், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். நடுவராக உள்ள குழுவினர் வீரர்கள் பிடிக்கும் காளைகள் குறித்து தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்பர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அதிக காளைகளைப் பெற்ற வீரர்கள் குறித்து அறிவிப்பு செய்யப்படும்.
வாடிவாசலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அடையாளக் கயிறு வேப்பிலைகளால் கட்டப்பட்டிருக்கும். மாடுபிடி வீரர்கள் அந்த எல்லை வரை காளையின் திமிலைப் பிடித்தவாறு பயணிக்க வேண்டும். அல்லது காளையின் திமிலை இறுகப் பற்றியவாறே காளையின் மூன்று சுற்றுகளுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டும்.

விதிமுறைகள்

அப்போதுதான் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். காளையின் கொம்புகளையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. அதேபோன்று காளையின் கால்களை கிட்டி (தங்களது கால்களால் காளையின் கால்களை கட்டுவது) போடக்கூடாது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வீரர்கள் முதலில் எச்சரிக்கப்படுவார்கள். தொடர்ந்து அவ்வாறு செய்வார்களேயானால், போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவர்.
அதேபோன்று வீரர்களின் எந்தப் பிடிக்கும் இடம் கொடுக்காமல் பாய்ந்து செல்லும் காளைகளே வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படும். அதேபோன்று வீரர்கள் சூழ்ந்துள்ள கூட்டத்தின் நடுவே, வீரர்களைத் தொடக்கூட அனுமதிக்காமல் எந்தக் காளை நின்று விளையாடுகிறதோ அந்தக் காளை சிறப்புப் பரிசும், சில நேரங்களில் முதல் பரிசும்கூட வெல்ல வாய்ப்புண்டு.

தன்னார்வலர்கள்

இவையெல்லாம் நடுவர்கள் மற்றும் வல்லுநர்களின் முடிவைப் பொறுத்ததாகும். காளைகளும், வீரர்களும் முன்வாடியில் விளையாடுவதற்கு ஏதுவாக, தரையில் ஒன்றரை அடி உயரத்தில் சற்றேறக்குறைய 150 மீட்டர் தொலைவில் தென்னைநார்க் கழிவுகள் கொட்டப்பட்டு மிருதுவாக்கப்பட்டிருக்கும். அவ்வப்போது அந்த தென்னைநார்க் கழிவுகளில் தண்ணீர் ஊற்றப்பட்டு பராமரிக்கப்படும். இதன் மூலம் காளைகளோ வீரர்களோ அடிபடுவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது.
காயத்திற்குள்ளாகும் வீரர்களையோ, காளைகளையோ உடனடியாக அழைத்துச் செல்ல ஏதுவாக செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்டோர் வாடிவாசலின் அருகே தேவையான வசதிகளோடு காத்திருப்பர். ஏறக்குறைய ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு இருபுறமும் சவுக்குக்கட்டைகள் மற்றும் இரும்பு பலகை கொண்டு அடைக்கப்பட்டிருக்கும்.

பரிசுகள்

இந்தப் பகுதிகளில் நின்று வேடிக்கை பார்க்கும் பொதுமக்களின் பாதுகாப்புக் காரணமாக இதுபோன்ற தடுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம். நிறைவாக அதிக காளைகளைப் பிடித்த வீரருக்கும், மாடு பிடி வீரர்களுக்குப் போக்குக் காட்டி விளையாடிய காளைக்கும் முதல், இரண்டு மற்றும் 3ஆவது பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!

Last Updated :Jan 13, 2022, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.