வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனு - நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
Rowdy varichiyur Selvam case வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்டுள்ள கொலை வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் தன் மீதான கொலை வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்த வழக்கில், அவர் மீது பதியப்பட்டுள்ள கொலை வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வரிச்சியூர் செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மதுரை கருப்பாயூரணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலையில் செந்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில், வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் உள்பட 3 பேர் கைதான நிலையில், செந்தில்குமார் கைதாகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதற்கிடையில், செந்தில்குமார் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இது வழக்கை மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனிப்படை காவல்துறை நடத்திய விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
எந்த ஒரு சாட்சியம் இல்லாமல், தன் மீது கொலை வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மேலும், செந்தில்குமாரை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், வழக்கின் விசாரணையை தற்போது விருதுநகர் கிழக்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் கொலை வழக்கை ஜோடித்து தன் மீது பதிந்துள்ளதாகவும், எனவே விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் தன் மீது உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், செந்தில்குமார் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலைத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 29ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
